முகப்புதொடர்புக்குமுந்தைய இதழ்கள் இதழ் - 2
01.02.2011 - 15.02.2011
சிறுகதை
இறப்புக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள்
           - வெண்பூ வெங்கட் + பரிசல்காரன்
சக்கரவியூகம் - ஜீவ்ஸ்
கோமதியம்மாள் தெரு - தேவராஜ் விட்டலன்
சாட்சியில்லாமல் சில சம்பவங்கள் - பார்வையாளன்
வினோதினியின் பூந்தொட்டி - கனாக்காதலன்
அதீதமாய் கொஞ்சம்
கவிதைகள்
கட்டுரைகள்
சிறுகதைகள்
தொடர்கள்
புத்தக அறிமுகம்
சினிமா
வலையோசை
போட்டோகிராபி
பிறவடிவம்
சக்கரவியூகம் -  ஜீவ்ஸ்
-1-

அடர்ந்த வனாந்தரத்தின் நடுவே, சலசலத்து ஓடும் நதியின் கரையில், அந்த ஐந்து குடில்களும் அமைந்திருந்தது. அவிழ்த்து விடப்பட்ட ஒரு குதிரையின் பக்கத்தில் நடுத்தர வயதுடைய ஒரு மனிதனும், அவனது இளம்பிராயத்தவன் போலவே ஒரு இளைஞனும் நின்றிருந்தனர். இடுப்பில் வரிந்துக் கட்டப்பட்டிருந்த உடையும், முகத்தில் இன்னும் மறைந்திடாத பால்வண்ணமும், தேகத்தின் வனப்பும் அந்த இளைஞனை பேரழகனாகக் காட்டியது. பதினைந்து பிராயங்கள் தாண்டி இருக்கும். விரைவில் எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகமாய் அவனிடத்தில் காணப்பட்டது.

"அடங்க மறுக்கும் குதிரையை அடக்கிக் காட்டு. குதிரையின் சுழியங்கள் நன்கு பழக்கப்பட்டால் எந்த வித குதிரைகளும் அடங்கிப் போகும். இதுவரை நீ எத்தனை குதிரை அடக்கி இருந்தாலும் இந்த உயர்வகைக் குதிரையை அடக்குவதில் தான் உன் திறமையை நான் காணப் போகிறேன். உனக்கான இன்றையப் பயிற்சி இதுதான். "

அந்த இளைஞனின் தந்தைக் கூறுவது காதில் விழுந்தாலும், அவன் கவனம் முழுதும் எதிர் நிற்கும் புரவியின் மீதே இருந்தது. அது அவன் தந்தையின் குதிரை. அவன் தந்தையைத் தவிர யாருக்கும் கட்டுப்படாதது. அந்த இளைஞன் சட்டென்று தாவி ஏறி அந்தப் புரவியின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து தன் வலிமையால் அதை அசையவொட்டாமல் நிறுத்தினான். பின் தந்தையை வெற்றி மிதப்புடனும், ஒரு சிறிய அலட்சியத்துடனும் நோக்கினான். அந்த ஒரு வினாடியில் குதிரை அவனைப் புரட்டிக் கீழே தள்ளிவிட்டுவிட்டு அவன் தந்தையின் அருகே சென்று நின்றுகொண்டது.

"இந்த அலட்சியம் தவறு அபிமன்யூ. வெற்றிக்கு அப்புறம்தான் அதிக நிதானம் தேவை. நிதானம் தவறும் போது எதிரி அந்த இடத்தைக் குறிவைத்து தாக்குவான். மேலும் குதிரைகளிடம் உள்ள சுழிகள், நிறம், உயரம், நீளம், பருமன், வால், கால், கழுத்து போன்றவற்றைக் கொண்டு அந்த குதிரை ராசியானதா, அதன் குணம் என்ன, ஜாதி என்ன, எப்படிப்பட்ட ஓட்டம் கொண்டது என்பதெல்லாம் கணிக்கப்படவேண்டும். ஒரு சத்திரியனுக்கு இதையெல்லாம் கணிக்கும் அசுவ சாத்திரம் கை கூடி இருக்க வேண்டும். அவன் போர் வாழ்க்கை அவன் ஏற்கும் குதிரையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது "

குதிரையை தடவிக் கொண்டே மேலும் சொன்னான் அர்ஜுனன்.

"அபிமன்யூ, உனக்கு வீரம் இருக்கும் அளவிற்கு தேவையான பொறுமையும், அதை செயல் படுத்தும் விவேகமும் இன்னும் கைகூட வேண்டும். குதிரையை பழகும் முன் குதிரையைப் பற்றி நன்கு அறியாமல் அதன் மீது கை வைக்கக் கூடாது. குதிரைக்கு மட்டுமல்ல இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்.."

"ஆகட்டும் தந்தையே. குதிரைகளை எப்படி பழக்குவது என்று சொல்லுங்கள்."

"நல்ல உயர்தரக் குதிரைக்கு நான்கு முழங்கால்களுக்குக் கீழேயும், நெற்றியிலும், ஆக மொத்தம் ஐந்து இடங்களில் வெள்ளையாக சுழிகள் இருக்கும். இந்த இலட்சனம் உள்ள குதிரை எளிதில் யாருக்கும் அடங்காது. ஆனால் பழகினவனை தன் உயிர் போகும் வரை காப்பாற்றுவதில் குறியாக இருக்கும். அதே போல் அதன் எஜமானன் இறந்து போனால் அந்த வேதனையிலே அதுவும் இறந்து போகும்."

அர்ஜுனன் கைகள் குதிரையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

"குதிரை என்பது நம்முடன் பழகும் நண்பனைப் போன்றது அபிமன்யூ. அதே நேரம் அதற்குறிய அத்தனை உபசாரங்களும் நாம் செய்தாக வேண்டும்."

உணர்ந்தாற் போல தலையாட்டினான் அபிமன்யூ. அர்ஜூனன் தொடர்ந்து குதிரையை பழக்கும் பல வழிமுறைகளை சொல்லிக் கொண்டிருந்தான்.

"இனி இந்தக் குதிரை உன்னுடையது அபிமன்யூ. நான் சொன்ன முறைகளைக் கொண்டு அந்த குதிரையிடம் பழகு. எல்லாம் விரைவில் கை கூடும். "

"இந்தக் குதிரையைப் பழக்கிவிட்டால் எனக்கு என்ன தருவீர்கள் தந்தையே.." சிரிப்புடன் கேட்டான் அபிமன்யூ.

"நீ நீண்ட நாட்களாய் கேட்டுக் கொண்டிருக்கும் சக்கர வியூகத்தின் அமைப்பு முறையையும் அதனை உடைத்துள் புகுவது மற்றும் மீள்வது பற்றியும் சொல்லித்தருவேன்"

"ஆகட்டும், தந்தையே"

"சரி, உச்சிப் பொழுதாகிவிட்டது, உணவருந்தப் போகலாம் வா"

"நீங்கள் சென்றுக் கொண்டிருங்கள். இன்னும் சற்று நேரத்தில் நான் வந்துவிடுகிறேன்"

அபிமன்யுவின் குதிரையின் கண்களை உற்று நோக்கியவாறே சொன்னான். குதிரை மெல்ல அவனிடம் நகர்ந்து வந்தது.

-2-

"நன்றாக கவனி அபிமன்யூ. எந்த ஒரு போரிலும் வெற்றி என்பது படைத்தளபதி வகுக்கும் வியூகத்தின்படிதான் அமையும். நம் முன்னோர்கள் பலவகையான போர் வியூகங்களை நமக்காக விட்டு சென்றுள்ளார்கள்."

"நான் சொல்கிறேன் தந்தையே.. மகரவியூகம், சர்ப்ப வியூகம், க்ரவுஞ்ச வியூகம், ஊசி வியூகம், சக்கர வியூகம் என பலவகைகள் இருக்கின்றன, சரியா" அபிமன்யூவை ஒட்டி நின்றது புரவி. கடந்த சில வாரங்களில் அந்த புரவியும் அபிமன்யூவும் மிகவும் ஒன்றி விட்டனர். எதையும் எளிதில் புரிந்துக் கொள்ளும் தன் மகனை கர்வத்துடன் நோக்கினான் அர்ஜுனன். பின்பு தொடர்ந்தான்.

"ஆம் அபிமன்யூ. அதில் மிக முக்கியமான வியூகம் சக்கரவியூகம். சுற்றிவைக்கப்பட்ட இரும்புச்சுருள் போல, சுருண்டு கிடக்கும் மரவட்டைப் போல அமைப்புக் கொண்டது சக்கரவியூகம். மொத்தம் ஐந்து வட்டங்கள் கொண்ட வியூகம் அது. பெரும் யானைப் படை முகப்பு வாயிலில் அரணாக முதல் வட்டத்திலும் அதைத் தொடர்ந்து உள் சுருளும் வட்டங்களில் எறிபொறிகள் கொண்ட படைகளும் மற்றும் வில்லாளிகள் கொண்ட படை நிறுத்தப்படும். மேலும் காலாட்படை தேர்ப்படை என யாவும் வட்டங்களின் ஆரத்தை நிரப்பும். இரண்டு வட்டத்துக்கும் நடுவில் எவ்வளவு பெரிய படை கொண்ட எதிராளியும் நுழைந்தால் மெல்ல மெல்ல நடுப்பாகம் தொடும் முன் முற்றிலும் அழிக்கப் படுவான். ஒவ்வொரு வட்டத்திற்கும் அதி சிறந்த வீரர்களாகிய மகாரதர்கள் பொறுப்பேற்பார்கள்."

"அதே நேரம் அந்த வியூகம் மற்ற வியூகங்களைப் போன்று நிலையாக ஒரிடத்தில் இருக்காது. நடுப்பாகத்தை அச்சாகக் கொண்டு அந்த வியூகம் நின்று நின்று சுற்றிக் கொண்டே இருக்கும். எதிராளி வியூகத்தில் அகப்பட்டால் அந்த சக்கரத்தில் உருட்டப்பட்டு, தான் இருக்கும் திசையும் அறியாது, வெளியேறும் வழியுமற்று, அங்கேயே அழிய வேண்டியதுதான். அப்படி வட்டம் சுற்றும் போது எதிராளி ஒவ்வொரு சுற்றுக்கும் புதுவகைப் படைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். உள் நுழைவதற்கு முன்பே கூட முழுப்படைகளும் அழிக்கப்படலாம்."

"அதன் உள் எப்படி நுழைவது தந்தையே "

"சக்கர வியூகத்தை உடைப்பது அத்தனை எளிதன்று மகனே. எதிரில் நின்று படைகளை அழித்து உள் நுழைய வாயில் ஏற்படுத்திய அடுத்த சில நிமிடங்களில் சக்கரம் சுழன்று உடைபட்ட அந்த வாயில் உடனடியாக அடைக்கப்பட்டுவிடும். மேலும் குதிரைப் படைக்கென்று ஆயத்தங்கள் செய்து போரிட்டுக் கொண்டிருக்கும் போது சுழலும் அந்த சக்கரத்தில் திடீரென்று யானைப்படையோ அல்லது காலட்படையோ வந்து திணறடிக்கும்"

"சுற்றிக் கொண்டிருக்கும் அந்த வியூகத்தை உடைப்பதற்கு அதிக வேகமும், அதே நேரம் சரியான நேரம் பார்த்தும் நுழைய வேண்டும். சக்கரம் சுழன்று நிற்கும் நேரத்தை கணித்து இடது, வலது புறங்களில் தாக்கி படைகள் அழிக்கப்பட வேண்டும். அப்போது இரண்டு புறமும் அழிக்கப் பட்ட இடத்தின் இடைவெளியில் நுழைய இயலாது. ஆகவே இரண்டு பக்கமும் அழிக்கப்பட்ட பின் நடுவில் நிற்கும் படை சுழலும் திசை நோக்கி நகரும் போது ஏற்படும் இடைவெளியில் உள் நுழைய வேண்டும். முக்கியமாக வியூகத்தின் பலமிழந்த பகுதி எது என்று கணிக்க வேண்டும். வேகமாய் நகரும் குதிரைப்படைகளை குறி வைக்கக் கூடாது. சக்கரம் சுற்றி காலாட்படை எதிர் வரும்போது மின்னலென தாக்கவேண்டும்."

"ஆஹா ஆஹா.. அற்புதம் தந்தையே. ஆனால் இது வரை சொன்னதெல்லாம் நீங்கள் எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவை போலவே எனக்கு நினைவில் அலைகிறது. ஆனால் வெளி வருவது எப்படி என்கிற சூட்சுமம் மட்டும்தான் புரியவில்லை"

அந்த நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சகாதேவன் அர்ஜுனனிடம் விரைந்து வந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். கண்ணன் தூதுக்கு துரியன் மறுப்பு தெரிவித்ததோடு இல்லாமல் கண்ணனைக் கொல்லவும் முயற்சித்தானாம். அர்ஜுனனுக்கு அதற்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை. மகனிடம் சொல்லவும் கூடத் தோன்றாமல் சட்டென்று எழுந்து தருமனின் குடிலுக்கு விரைந்தான்.

அபிமன்யூவின் எண்ணம் முழுக்க சக்கரவியூகம் வியாபித்தது. அர்ஜுனனுடன் அபிமன்யூ செல்ல, அவன் விதி அவனை முந்தி விரைந்தது.

-3-

குருஷேத்திரப் போர் துவங்கி பன்னிரண்டு நாட்கள் ஆகிவிட்டன. பிதாமகர் பீஷ்மர் வீழ்ந்து, துரோணர் போர்த்தலைமைப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கிறார். துரோணர் அனல் பறத்தி பாண்டவப் படைகளை துவம்சம் செய்தாலும், அதை விட தீவிரமாய் அர்ஜுனன் கௌரவப் படைகளை அழித்துக் கொண்டிருந்தான். இரு பக்கமும் அதிக சேதம் அடைந்திருந்தது. ஆனால் நாளுக்கு நாள் பாண்டவர்களின் பக்கம் வெற்றியின் சாயல் படர ஆரம்பித்திருந்தது. பன்னிரண்டாம் நாள் இரவு ஆலோசனை மண்டபத்தில் துரியோதனனின் குரல் வெறுப்பும், ஆத்திரமும் இயலாமையும் கலந்து வெளிப்பட்டது.

"ஆச்சாரியருக்கு பாண்டவர்கள் மேல் பாசம் போகவில்லை போலிருக்கிறது. வயிறு கவுரவர்களுக்கும் மனது பாண்டவர்களுக்கும் ஏன் வைக்கிறீர்கள் ஆச்சாரியரே"

"துரியோதனா... நாவடக்கம் தேவை. எதிரிகள் என்ன தெருவில் செல்லும் சாதாரண மானிடர்களா. அவர்களும் அஸ்திரங்கள் அறிந்த அதி வீரர்கள். முக்கியமாக அர்ஜுனனைப் பற்றி உனக்குத் தெரியாததல்லவே. அவனிருக்கும் வரை பாண்டவர்களின் படைகளை அழிப்பதென்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று."

அர்ஜுனன் பெயர் உச்சரிக்கப்பட்ட போதில் தானாக அவர் குரல் நெகிழ்ந்ததை துரியோதனன் கவனிக்க மறுக்கவில்லை.

"மன்னிக்க வேண்டும் ஆச்சாரியாரே. நீங்கள் நினைத்தால் இந்திரனே எதிர் வந்து போரிட்டாலும் அழிக்கும் வன்மை படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். பிதாமகர் பீஷ்மர் தலைமையில் இருந்த போதும் சரி நீங்கள் பொறுப்பேற்ற பின்னும் சரி. நம் படைகளின் அழிவு அதிவேகமாக நடக்கிறதே தவிர்த்து பாண்டவர்களின் அழிவைக் கண்டிலேன் யான்."

"துரியோதனா, நீ அவசரத்தில் பேசுகிறாய். அர்ஜுனனை வெல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. எனக்குத் தெரிந்த அத்தனை அஸ்த்திரப் பிரயோகங்கள் அஸ்வத்தாமனுக்கும் அவனுக்கும் தெரியும். நாங்கள் எதிர் நின்று போரிட்டால் வெற்றி தோல்வி யாருக்கென்பது முடிவு செய்வது முடியாத காரியம்."

"முடியாதென்றால் ஒதுங்கிவிடுங்கள் துரோணரே. என் நண்பன் கர்ணன் அனைவரையும் தவிடு பொடியென ஆக்கிக் காட்டுவான். சத்திரியர்கள் போரிட்டால் யுத்தம் வெல்லலாம். காட்டில் தவம் செய்யும் முனிவரைக் கொண்டு வந்து போரிடு என்று சொல்லிக் கொண்டிருப்பது என் தவறுதான்."

இப்படியான இழிச்சொல் துரோணருக்குப் புதிதல்ல என்றாலும் தன் வீரத்தை ஒருவன் பழிக்கிறான் என்ற போதில் அவருக்கு தாங்க முடியவில்லை. இயன்றவரையில் கோபத்தை அடக்கிக் கொண்டார்.

"துரியோதனா, உன்னிடம் இருப்பதற்கு காரணம் நீயல்ல, உன் தந்தை. என்னை இங்கே ஆச்சாரியனாக அங்கீகரித்து, என் குழந்தையைப் பசியிலிருந்து காத்தவர் அவர். அவர் குழந்தையை காப்பது என் கடன் என்று இங்கிருக்கிறேன். ஒன்று மட்டும் கேள். என் உயிர் இருக்கும் வரை உன் உயிர் காப்பேன். இது சத்தியம்"

"என் உயிர் பற்றி எனக்கு கவலை இல்லை, ஆச்சாரியரே. பாண்டவர்கள் தோற்றோடவேண்டும். அது மட்டுமே எனக்குத் தேவை"

"அப்படியானால் நாளை அர்ஜுனனை முடிந்தால் களத்தில் இருந்து அகற்று. அதுவும் உன் வீர தீரம் கொண்ட கர்ணனைக் கொண்டு செய், பார்ப்போம். மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்." கர்ணனைப் பற்றி சொல்லும் போது அவரின் குரலில் வெளிப்பட்ட எள்ளல் கர்ணனை காயப்படுத்தியது. அவன் அவமானத்துடன் அமைதியாக தலை குனிந்தான்.

"அப்படியே ஆகட்டும். ‘சம்ஸப்தகர்'களைக் கொண்டு அர்ஜுனனைக் களத்தை விட்டு வெகுதூரம் கொண்டு செல்கிறேன். ஆனால் பாண்டவப் படைகளை எப்படி அழிப்பீர்கள்?"

"இதுவரை யாரும் உபயோகிக்காத வியூகம் ஒன்றை நாளை அமைக்கப் போகிறேன். அதை உடைக்க எதிர் தரப்பில் இருவரால் மட்டுமே முடியும். ஒருவன் கண்ணன், மற்றொருவன் அர்ஜுனன். கண்ணன் போரிட மாட்டேன் என்ற சபதத்தை மீற மாட்டான். ஆனால் அர்ஜுனன் இதை தவிடு பொடியாக்கிவிடுவான். அவன் மட்டும் வியூகத்தை எதிர்க்க இல்லை என்றால் எளிதாக பாண்டவப் படை அழிக்கப்பட்டுவிடும்"

"அப்படி என்ன வியூகம் ஆச்சாரியரே.."

முதலாசான் கிருபாச்சாரியார் எழுந்து நின்று சொன்னார்.

"என் யூகம் சரியென்றால் அது சக்கரவியூகம்"

துரோணர் ஆமோதிப்பதைப் போல் தலையசைத்து விட்டு வியூகங்கள் பற்றியும் அதற்கு யாரார் எந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தத்துவங்கினார்.

"ஆச்சாரியரே, அர்ஜுனன் இல்லை என்றாலும் மற்ற நான்கு பேரும் ஒன்று சேர்ந்து முயற்சித்தால் வியூகத்தை உடைத்து உள்புக முடியாதா"

துரியோதனனின் குரலில் நம்பிக்கையையும் மீறி தொனித்தது சற்றே அவநம்பிக்கை.

"அவர்களை நான் தடுப்பேன். என்னை மீறி அவர்கள் உள் செல்ல முடியாது"

மண்டபத்தின் ஓரத்தில் இருந்து ஒருவன் எழுந்து சொன்னான். அவன் சிந்து தேசத்தின் அரசன், கௌரவர்களுடன் மருமகன் உறவு பூண்டவன். அவன் பெயர் ஜெயத்ரதன். பாண்டவ வனவாசத்தின் போது திரவுபதியைக் கடத்த முயன்று பின் பயத்தால் அவளைப் பாதிவழியில் விட்டு தப்பியோட முயற்சித்து அப்புறம் பீமனிடம் அகப்பட்டவன். அபயம் என்று கேட்டதால், தர்மன் இரக்கப்பட்டு உயிர் பிச்சையிட்டு அனுப்பப்பட்டவன். அப்படி அனுப்பப்படும் போது அவமானச்சின்னமாக ஐந்து குடுமிகளை தலையில் பீமனால் பிறையம்பு கொண்டு சிரைத்து அனுப்பப்பட்டவன்.

"இத்தனை மஹாரதர்கள் இருக்கும் போது அவர்களால் முடியாத ஒன்று உன்னால் முடியுமா?"

"முடியும். பாண்டவர்களின் வனவாசத்தின் போது அவர்களிடம் நான் பட்ட அவமானம் இன்னும் மறக்கவில்லை துரியோதனரே. எனக்கு ஐந்து குடுமி வைத்து அவமானப்படுத்தினார்களே அதை மறக்க முடியுமா? தங்களை வெல்ல யாருமில்லை என்ற அகங்காரத்தை அடக்க அன்றே சபதமிட்டேன். என் தவத்தால் அதன் விளைவான சிவனின் வரத்தால், அவர் தந்த செங்கொன்றை மலரைச் சூடி அர்ஜுனன் தவிர்த்த நால்வரையும் என்னால் ஒரு நாள் முழுக்க போரில் வெல்லமுடியும்"

"ஆஹா ஆஹா.. இது போதுமே.. ஆச்சாரியரே இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு?"

"அப்படியே ஆகட்டும். இவன் சக்கர வியூக வாயிலைக் காப்பான். ஒவ்வொரு ஆரத்திற்கும் ஒவ்வொரு மஹாரதர்கள் பொறுப்பேற்கட்டும். அச்சாணியில் துரியோதனன் இருக்கட்டும். தருமனை சிறைபிடித்ததும், அச்சாணிக்குள் கொண்டு வரப்படுவான். சக்கர வியூகத்தை மீறி வேறு யாரும் உள் நுழைய முடியாது. வெற்றி நிச்சயம் நமதே. தருமன் நிச்சயம் பிடிபடுவான்."

துரோணர் உரத்துக் கூறினார். அந்த வியூகத்திற்கு ஏற்படப்போகம் பங்கத்தை அவர் அறிந்திருக்கவில்லை. சட சடவென காற்றில் பறக்கப் போகும் போர் தர்மங்களைப் போல வெளியில் மரங்கள் காற்றில் சலசலத்துக் கொன்டிருந்தன.

(சற்றே பெரிய கதையான இதன் முடிவுப் பகுதி அடுத்த இதழில் வெளியாகும்).
படைப்புகள் குறிந்த உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி : feedback.atheetham@gmail.com
© அதீதம் 2011